அவள் அப்படித்தான்

----அவள் அப்படித்தான்------

கைநிறைய பூக்களை ஏந்தி - நீ
கால் பதித்த பாதையில்
காதலோடு வந்தேன்.

நான் நீட்டிய ரோஜாக்களை
நிராகரித்தாய்.
நான் காட்டிய காதலை
கரு அறுத்தாய்.

என் நம்பிக்கைகளை
நீ பிடுங்கி எறிந்த போதும்
உன்னை பின்தொடரும்
பிடிவாதம்
குறைந்தபாடில்லை.

காதலோடு
உன் வாசல் வந்து நின்றபோதெல்லாம்
சட்டென்று கதவடைத்தாய்.

காலம் போனால்
காற்றோடு நானும்
கரைந்திடுவேன் என்று
கணக்கிட்டாய்.

புயலுக்கு சாய்ந்துவிடாத
நாணல் புதர்களைப் போல
நாட்கணக்கில்
நானும் காத்திருந்தேன்.

இரக்கபட்டையோ
என்னவோ
இறுதியில்
கண்களை திறந்தாய்
மெல்ல மெல்ல
ஜன்னலை திறந்தாய்
காதலோடு
கதவையும் திறந்தாய்.

ஊசி கொண்டு
கிணறு வெட்டிய
உற்சாகம் எனக்குள்.

என் தேவைகளை
தேடி வந்து தீர்க்கிற
தேவதையாக...

என் நிராசைகளை
நிவர்த்தி செய்கிற
நிலாவாக.....
நிரந்திரமாய்
என்னோடு நின்றுவிட்டாய்.

என் அகராதியில்
வாழ்க்கை என்பதன்
ஒரே அர்த்தம்
நீ - என்று
நிரப்பட்டுவிட்டது.

நாட்கள் உருண்டோட
நாடகம் அரங்கேற...
குடும்பத்தின் நலம்
குறித்து ஆலோசித்தாள்.

அவள் வீட்டு வேப்பமரம்
எப்பொழுது போதிமரமாக
வேசம் போட்டதோ!

ஞாயிறு பிறக்காத அவளுக்குள்
எப்படி ஞானம் பிறந்ததோ!
தெரியவில்லை.

நம் இரயில் பயணத்தில்
நான் இறங்க வேண்டிய இடம்
இதுவே என்றாள்.

எதையும் தாங்கும்
இதயம்
திடீரென தடம் புரண்டது.
உயிர் மாய்த்து கொள்ள
புத்திக்குள் இடம் இருந்தது.

என் சிலப்பதிகாரம்
சிதைந்து போக
அதில் கண்ணகி
கதாபாத்திரம்
காணமல் போனது.

அவளுக்கு இராமாயணம் பிடிக்கும்
ஆனால் இராமனைத்தான் பிடிக்காது..

உன் குடும்ப நலனுக்காக
காதலை நீ தியாகம்
செய்தாய்.
சரி....
உன் காதல் மட்டுமே
உலகமென்று இருக்கும்
என் காதலை
ஏனடி உலையில் வைத்தாய்?

நீ குளிர் காய
கட்டை கிடைக்காமல்
என் காதலை எரித்தாயோ?
காரியம் முடிந்தபின்
அதை அணைக்க
என் கண்ணீர் கேட்பாயோ ?

இது அன்பு சுரக்கும் நெஞ்சடி
அதன்மேல் அம்புகள் எய்யாதடி.
ஒரு நாளும் தூங்கதடி
சிறு கீறல் தாங்கதடி.

அமைதி குளமாயிருந்த
என் வாழ்வில்
ஒரு கல்லாய்
நீ விழுந்து
அதிர்வை ஏற்படுத்தினாய்.

விழுந்த கல்
உன் இதயத்தின்
ஒரு துகள் என்பதை
இப்போது உணர்ந்தேன்.

அடக்கி வைத்தாலும்
அன்னையின் காம்புகளை
நோக்கி பாய்கிற
கன்றை போல

மறுபடியும்
கையில் மலர்களோடு
தீ வீசிப் போகும்
உன் திசை பின்னே
தொடர்கிறேன்...

இம்முறையும் கதவடைக்கபடுகிறது.
அவள் முதலிரவுக்காக.........

---- தமிழ்தாசன்----


Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்