ஒரு நாய் வளர்ந்த கதை


----- ஒரு நாய் வளர்ந்த கதை -------

சாலையினோரம்
சகமனிதர்கள் யாரும்
சித்திரவதைக்குள்ளாகி
சீல்ரத்தம் வடிந்து
செத்து கிடந்தாலும்,
ஐயோ பாவமென
அழுதகுரல் வடிக்க
அனுதாபமற்ற
ஆட்கள் நடமாடும்
நவீன நகரத்தின்
நடுமையத்தில்
நாய்க்குட்டி ஒன்று
நனைந்து குளிர்மழையில்
நடுங்கிட கண்டேன்.

இனவெறி தாக்குதலுக்குள்ளான
உயர் குனமுடையவர்களைப் போல்
குட்டி நாயின் முதுகில்
சில வெறி நாய்கள்
குதரியிருப்பது கண்டேன்.

கழுத்தறுத்து கொலை
பெண் கற்பழிப்பு புலையேன
மக்களே
கதிகலங்கி இருக்கும்
இந்த தேசத்தில்
பச்சிளம் நாய்குட்டியை
விட்டுவர மனமில்லை.

பிள்ளைப் போல்
மார்போடு அதை அள்ளி
ஒரு பிதாவாக
மனை வந்தடைந்தேன்.

ஒருபடி கூடுதலாக இனி
உலை வைக்க வேண்டிய
சட்ட சிக்கலை
சந்தித்தது என் சமையலறை.

கம்யூனிசம் படித்ததாலே
கட்டிபோட்டு நாயை
காவல் பணியமர்த்தும்
ஏகாதிபத்திய எண்ணம்
எனக்கில்லை.

செய்யாத தவறுக்கு
ஜெயில் தண்டனையுற்ற
எனக்கு தெரியும்
நான்கு சுவர்களுக்குள்
நாய் வளர்ப்பதொன்றும்
நல்லதில்லை.

நாட்கள் நகர்ந்தது
நாயும் வளர்ந்தது.

பட்டு தெரியாமல்
பாடம் படிக்காமல்
நன்றியென்னும்
நற்குணத்தை
நாய் கற்றிருந்தது.

ஊரெல்லாம் சுற்றிவரும்
உறங்கத்தான் வீடு வரும்
யாரென்று தெரியாதொரிடமும்
யாசகம் பெற்றுவிடும்.

அதற்க்கு
நண்பர்களென சொல்லி கொள்ள
நான்கைந்து நாய்களுண்டு
தெருவில்.

அதில் ஒன்று மட்டும்
வயிறு வீங்கி
சிசுக்கள் தாங்கியிருந்தது
கருவில்.

ஒருமனிதனுக்கு
பல பெயர்கள் இருக்கலாம்
ஆனால்
அத்தனை நாய்களுக்கும்
நாங்கள் வைத்த ஒரே பெயர்
தெருநாய்.

புது நாய்கள்
நுழைந்தால்
எங்கள்
தெருநாய்கள் எல்லாம்
போராளியாக மாறிடும்
எப்போதும்
ஒன்றாக சேர்ந்தினைந்தே
போரிடும்.

குப்பைகள் கிளறி
தின்று கொழுத்தும்
எந்த நாய்களுக்கும்
தொப்பையில்லை.

நான்கைந்து நாய்களுக்கு
பாலை சுரக்கும்
பலம்
ஒரு குப்பை தொட்டி இருக்காது.

குப்பைமேடுகளில்
பந்தி இருப்பதால்
எப்போதாதவது தான்
என் இல்லத்தில்
நாக்கை நனைக்கும்
நாய்.

நகராட்சி அரசு
சுகாதாரம் கருதி
குப்பைத்தொட்டிகளை
பெயர்த்தெடுத்தது.
குப்பை சுமக்கும் வண்டிகளை
கொண்டுவந்தது.

அச்சமயம்
போய்வரவேண்டிய ஊருக்கெல்லாம்
பொங்கல் விடுமுறை நாட்களை
பயன்படுத்தி
போய்வந்தேன்.

இரண்டு நாட்கள்
நான் இல்லாத பிரிவை
எனை கண்டதும்
வாலையாட்டி
நாக்கால் வருடி
வரவேற்கும் உபசரிப்புகளை
சரிவர செய்தது என் நாய்.

நாய் குலைக்கும் சத்தம்
குறைந்து சிணுங்கலாக
ஒலித்தது.

பசியில் நாய்
பாதிஉயிர் இழந்திருப்பதை
உணர முடிந்தது.

உடனே வீட்டில் இருப்பதை
உருட்டி எடுத்து
தட்டில் வைத்தேன் சில
ரொட்டி துண்டுகளை.


என் மனதின் வெளியில்
ஒரு போதிமரம் முளைத்தது.

ஞானம் பெற
எனக்குள்
ஒரு கேள்வி எழுந்தது.

தெரு நாய்கள் சாப்பிட்டு இருக்குமா?


--- தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?