அணைபூதம் (எ) புத்தர்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், எல்லப்பட்டியில் சுருளியாற்றின் குறுக்கே வெள்ளையர்கள் (John Pennycuick) காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை ஒன்று உள்ளது. அணையின் மேற்கு கரையில் மரத்தடியில் ஏழு கன்னிமார் கோயிலும், ஆற்றினுள்ளே தலையில்லா புத்தர் சிலையும் காணப்படுகிறது.



அணைபூதம் (எ) புத்தர்:
ஆற்றின் கரையோரமாக ஒரு மரத்தின் அடியில் புத்தர் சிலை இருந்ததாகவும், ஆங்கிலேயர் காலத்தில் சுருளியாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் புத்தர் சிலை அடித்து செல்லப்பட்டதாகவும், அன்றிலிருந்து தலை சிதைந்த நிலையில் ஆற்றினுள் நடுவில் புத்தர் சிலை இருப்பதாகவும் புத்தர் சிலை குறித்து ஊர் மக்களிடம் கதைகள், நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால் புத்தரின் தலை குச்சனூர் அருகே ஆற்றில் கிடப்பதை மக்கள் பார்த்ததாக சொல்லப்படுகிறது.







எல்லப்பட்டியில் அரிசிக்கடை வைத்திருக்கும் 70 வயது மதிக்கத்தக்க ஊர் பெரியவர், தாம் பிறப்பதற்கு முன்பிருந்தே தலையற்ற புத்தர் சிலை ஆற்றினுள் இருப்பதாக தெரிவித்தார். இப்புத்தரை அணபூதம் (அணை பூதம்) என்று மக்கள் வழிபடுகின்றனர் என்று தெரிவித்தார்.




சமணர் Vs புத்தர் சிலை வேறுபாடு:


சமண தீர்த்தங்கர் மகாவீரர் சிலையும், புத்தர் சிலையும் தியான நிலை தோற்றத்தில் ஒரே போன்று இருப்பதை காணலாம். மகாவீரர் சிலைகள் ஆடைகளற்ற நிலையில் (திகம்பரர் பாணி) சித்தரிக்கப்படுகின்றன மற்றும் மார்பின் மையத்தில் 'ஸ்ரீவத்ச' முத்திரை இருக்கும். மகாவீரர் தனது துறவறத்தின் அடையாளமாக தனது தலைமுடியைப் பிய்த்து எறிந்ததாக (Lochas) சமணக் கதைகள் கூறுகின்றன. எனவே, அவரது சிலைகள் பெரும்பாலும் மொட்டையாக, தியான நிலையில், யோக முத்திரையுடன் (அர்த்த பரியங்க ஆசனம்), தலைக்கு மேல் முக்குடையுடன் வடிவமைக்கப்படுகின்றன. சில சமயம், நீண்ட தியானம் காரணமாக வெயிலில் இருந்து காக்க அவர் தலையில் முடி இருந்தது போன்று கலைப்படைப்புகளில் மகாவீரர் தலைமுடியுடன் இருந்தது போன்றும் சித்தரிக்கப்படுகிறார்.



புத்தரின் தலையின் உச்சியில் ஒரு சிறிய மேடு அல்லது முடிச்சு போன்ற அமைப்பு இருக்கும். அதனை உஷ்னிஷா (Ushnisha) என்று அழைக்கின்றனர். புத்தர் ஞானம் பெற்றபோது அடைந்த "விரிவடைந்த அறிவு" (Expanded Wisdom) அல்லது உயர்ந்த ஞானத்தை குறிக்கிறது. இரு புருவங்களுக்கும் இடையே ஒரு சிறிய பொட்டு அல்லது சுழி போன்ற அடையாளம் காணப்படும். அதனை உர்ணா (Urna) என்பர். தீர்த்தங்கரர் சிலைகள் (குறிப்பாகத் திகம்பரர் பாணி) ஆடையின்றி இருக்கும். ஆனால், புத்தர் சிலைகள் எப்போதும் ஒரு மெல்லிய துறவற ஆடை அணிந்திருப்பது போலவே செதுக்கப்படும்.  சமணத் தீர்த்தங்கரர் சிலைகளின் மார்பில் இருக்கும் 'ஸ்ரீவத்ச' முத்திரை புத்தர் சிலைகளில் பெரும்பாலும் இருக்காது.


புத்தர் சிலை ஆடை:

புத்தர் சிலைகளில் காணப்படும் ஆடைகள் பொதுவாக சீவரம் (Civara) அல்லது கஷாயம் (Kasaya) என்று அழைக்கப்படுகின்றன. இவை பௌத்தத் துறவிகள் அணியும் மஞ்சள், காவி அல்லது செம்மஞ்சள் நிற ஆடைகளாகும்.


  • சங்காதி (Saṃghati): இது புத்தர் சிலைகளில் பெரும்பாலும் காணப்படும் தோள் துண்டை போன்ற சால்வை ஆகும்.
  • உத்தராசங்கம் (Uttarāsaṅga): இது உடலை மறைக்கும் போர்வை போன்ற மேலாடை ஆகும்.
  • அந்தர்வாசம் (Antarvāsa): இது இடுப்புக்குக் கீழே அணியப்படும் வேட்டி போன்ற கீழ் ஆடை.

எல்லப்பட்டி சுருளியாற்றின் நடுவில் தலையற்ற சிலையின் இடது தோளில் சால்வை போன்ற ஆடை காட்டப்பட்டிப்பது புத்தர் சிலை என்பதை உறுதி செய்கிறது.


கருங்கல்லில் வடிக்கப்பட்ட 3 அடி உயரமுள்ள புத்தர் சிலையின் இடது மார்பில் சங்காதி மேலாடையுடன், இரு கால்களையும் மடக்கி தியான முத்திரையில் அர்த்தபத்மாசனத்தில், அமர்ந்த நிலையில் உள்ளார். கருங்கல்லால் செய்யப்பட்ட இப்புத்தர் சிலை கிபி 10-11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.


புத்தர் சிலையின் எதிரே சிதைந்த நிலையில் ஒரு செங்கல் கட்டுமானம் காணப்படுகிறது. அது கோயில் கட்டுமானம் அல்ல, பழைய அணைக்கட்டின் சிதைவு என மக்கள் தெரிவித்தனர்.

வழிபாட்டில் புத்தர்:

எல்லப்பட்டியில் உள்ள திருமணமான பெண்கள் 7வது மாதம் வளைகாப்பு முடிந்த நாளில் அவரின் குடும்பத்தார்கள் இங்குள்ள கன்னிமாருக்கும் அணபூதத்திற்கும் (புத்தர்) பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். வளைகாப்பு முடிந்த நாள் (செவ்வாய், புதன், வெள்ளி) இரவில் அரிசி, மசாலா, சேவல், சாராயம், சுருட்டு, காதோலை கருகமணி, மல்லிப்பூ, வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட படையல் பொருட்களை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்று கோழி அறுத்து, பொங்கலிட்டு கன்னிமாருக்கும் அணபூதத்திற்கும் படைக்கின்றனர். இந்த படையல் செலவை பெண்வீட்டார்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு அருள் கொடுக்கும் தெய்வமாக அணபூதம் (புத்தர்) இருக்கிறார் என்பது ஊர் மக்களின் நம்பிக்கை.

-- தமிழ்தாசன்

ஆய்வு செய்த நாட்கள்: 24. 03.2026 & 26.04.2026

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்