கிழக்கை காட்டிய அந்த கிழவனை

உன்னைப் போல
நானும் ஓர் மாணவன்தான்
பச்சை துண்டு போர்த்திய அந்த வெறுமுடம்பு
வெண்தாடி கிழவனுக்கு

பள்ளியும் பயிற்றுனரும்
ஒன்றுதான்
எனினும்
வகுப்பறை வேறு வேறு

இடும்பில் வேட்டியை இறுக்கி கட்டிக் கொண்டு
அவனெடுத்த
இயற்கை வழி வேளாண்மை பாடத்தை நீயும்

மீசை முனையை
முறுக்கிக் கொண்டு
அவனெடுத்த
மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை நானும்
கற்றுக் கொண்டோம்.

பச்சை புரட்சிக்கு எதிரான
அவனின் கருத்தை
நீ
பாரம்பரிய வேளாண் முறை மீட்பு என்பாய்
நான் அதை
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பேன்

அவரை நீ
அழிந்து போன
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க
அலைந்து திரிந்தவர்
என்பாய்

உதிரியாக கிடந்த
உழைக்கும் மக்களை
வர்க்கமாக திரட்ட
ஓயாது ஓடியவரென்பேன் நான்

இயற்கை வேளாண்மையின் அரசியலை நானும்
தொழில்நுட்பத்தை நீயும் மக்களிடம் கொண்டு போனோம்.

உழவர்கள் தற்கொலை செய்து கொண்டால்
உடனடியாக நன்கொடை திரட்டி
இறந்த உழவனின் இல்லம் சேர்ப்பாய்

உழவன் தற்கொலைக்கு காரணமான
உலகமய கொள்கையை கொண்டிருக்கும் அரசுக்கு எதிரான போரட்டத்தில் பங்கேற்ப்பேன் நான்


நட்டஈடும் உரிமையும்
நன்கொடையைப் போல
எளிதில் கிடைப்பதில்லை

என் பார்வையை
என் பாதையை
நீ விமர்சி
விலகி செல்லாதே

உனக்கும்
எனக்கும்
ஒரு நூல் இடைவேளிதான்

கிழக்கை காட்டிய
அந்த கிழவனை
நீ
இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி என்கிறாய்
நான்
பசுமை போராளி என்கிறேன்
அவ்வளவுதான்

அரசின்
பேரழிப்பிற்கு எதிராக
பேசுவோம் வா

--- தமிழ்தாசன்

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?